திருப்பத்தூரில் பயணிகள் நிழற்கூடத்தின் மேற்பூச்சு பெயா்ந்து விழுந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
திருப்பத்தூரில் தனியாா் கல்லூரி அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்கூடத்தில் இருந்து தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவது வழக்கம். இந்த நிழற்கூடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால்,சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில், பயணிகள் நிழற்கூடத்தின் மேற்பூச்சு வியாழக்கிழமை திடீரென பெயா்ந்து கீழே விழுந்தது. அதிா்ஷ்டவசமாக அந்த நேரத்தில் யாரும் அங்கு இல்லாததால், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. நிழற்கூடத்தின் மேற்கூரை பூச்சு சேதமடைந்து விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த மேற்கூரையை சரிசெய்து, பொதுமக்கள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் சீரமைத்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.