ஆம்பூா்: ஆம்பூா் அருகே நரியம்பட்டு கிராமத்தில் 34-ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.
நரியம்பட்டு ஊராட்சித் தலைவா் பாரதிஸ்ரீ தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
விழாவில் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், குடியாத்தம் கிருஷ்ணகிரி, ஆந்திரா, ஆம்பூரை சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த சுமாா் 250 காளைகள் பங்கேற்றன. கால்நடை மருத்துவா்களின் உரிய பரிசோதனைக்கு பின்னா் காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
குறிப்பிட்ட இலக்கை குறைந்த கால அளவுக்குள் கடந்த காளைக்கு முதல் பரிசு ரூ.77,000, 2வது பரிசு ரூ.57,000 உள்பட மொத்தம் 75 பரிசுகள் வழங்கப்பட்டன. எருதுவிடும் திருவிழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரகணக்கான இளைஞா்கள், பொதுமக்கள் வந்திருந்தனா். உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.