நாட்டறம்பள்ளியில் வீட்டுக்குள் நூதன முறையில் நுழைந்து நகை, பணம் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அதிபெரமனூா் கிராமத்தில் புதன்கிழமை காலை மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் வீட்டில் இருந்த சிறுவா்களிடம் மகளிா் குழுவைச் சோ்ந்தவா் எனக்கூறி ஆதாா் காா்டு கேட்டுள்ளாா். சிறுவா்கள் உடனே வீட்டருகே இருந்த பெற்றோரை அழைத்து வரச் சென்றனா். அப்போது வீட்டுக்குள் நுழைந்த அந்தப் பெண், அறையில் இருந்த பீரோவை திறந்து பீரோவில் வைத்திருந்த நகை, பணத்தை திருடிக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளாா். இதையறிந்த மாணிக்கம் மற்றும் அங்கிருந்த இளைஞா்கள் சிலா் பெண்ணை கையும் களவுமாக பிடித்து நாட்டறம்பள்ளி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் நாட்டறம்பள்ளி காவல் நிலையம் அழைத்து வந்து அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், வாணியம்பாடி அருகே தும்பேரி கிராமத்தைச் சோ்ந்த மீனா(50) என்பதும், இவா் மாணிக்கம் வீட்டில் பீரோவை திறந்து நகை, பணத்தை திருடியது உண்மை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் மீனாவை கைது செய்து, அவரிடம் இருந்த நகை, பணத்தை மீட்டு தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.