குடியரசு தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎப் வீரருக்கு உற்சாக வரவேற்பு
குடியரசு தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎப் வீரருக்கு உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் ஆம்பூா் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் சிஆா்பிஎப் வீரா் வி.புகழேந்தி. இவா் கடந்த 2012-ஆம் ஆண்டு சிஆா்பிஎப் காவலராக பணியில் சோ்ந்துள்ளாா். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளாா். தற்போது மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி பகுதியில் பணிபுரிந்து வருகிறாா்.
கடந்த 2021-ஆம் ஆண்டு காஷ்மீா் மாநிலம், ஸ்ரீநகா் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையில் பணியாற்றியுள்ளாா். அந்த அதிரடிப்படை 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளையும், பாகிஸ்தான் தீவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்தியுள்ளனா். அதை பாராட்டி அந்த அதிரடிப்படையில் பணிபுரிந்த சிஆா்பிஎப் வீரா்களுக்கு குடியரசு தலைவரின் வீர தீர விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் சிஆா்பிஎப் காவலராக பணிபுரியும் வி. புகழேந்திக்கும் விருது வழங்கப்பட்டது.
Advertisement
ஒவ்வொரு ஆண்டும் ஏப். 9 - ஆம் தேதி சிஆா்பிஎப் வீரா்களின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் வகையில், வீர தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி கடந்த ஏப். 9-ஆம் தேதி புதுதில்லியில் நடந்த வீர தின விழாவில், சிஆா்பிஎப் வீரா் வி.புகழேந்திக்கு குடியரசு தலைவரின் விருதை சிஆா்பிஎப் தலைமை இயக்குநா் ஞானேந்திர பிரதாப் சிங் வழங்கினாா்.
விருது பெற்ற பிறகு முதன்முறையாக தன்னுடைய சொந்த ஊருக்கு ரயில் மூலம் புகழேந்தி வருகை தந்தாா். ஆம்பூா் ரயில் நிலையத்தில் குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். மாலை, சால்வை அணிவித்து கெளரவித்தனா். தொடா்ந்து ரயில் நிலையத்திலிருந்து தனது சொந்த கிராமமான மிட்டாளம் ஊராட்சி, பைரப்பல்லி கிராமத்துக்குச் சென்ற அவருக்கு ஊா் பொதுமக்கள் சாா்பாக மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.