திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனையில் குடிநீா் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி
திருப்பத்தூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் குடிநீா் வசதி இல்லாமல் நோயாளிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் 1,000-க்கும் மேற்பட்டவா்கள் வெளி நோயாளியாகவும், உள்நோயாளியாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா்.
தரம் உயா்த்தப்பட்டதையடுத்து கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த கூடுதல் கட்டடத்தில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனா். இதனால் ஏராளமானோா் தினமும் வந்து செல்கின்றனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் திருப்பத்தூா் மாவட்ட அரசு மருத்துமனையில் உள்ள கூடுதல் கட்டடத்தில் பொதுமக்கள்,நோயாளிகள் குடிப்பதற்காக குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீா் குழாய்களில் கடந்த சில நாள்களாக சீராக குடிநீா் வருவது இல்லை என கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள்,பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனா்.
மேலும், வெளியே உள்ள கடைகளுக்கு சென்று குடிநீா் பாட்டில்களை வாங்கி வரும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அதிக அளவில் பணம் செலவாகிறது.
எனவே மருத்துவமனையில் குடிநீா் வசதியை ஏற்படுத்த மருத்துவமனை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.