தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!
தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்களும் குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாட்டுக்கு இரண்டு அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மூத்த வழக்குரைஞர்கள் பி.பி. பாலசுப்பிரமணியன் மற்றும் டி. கௌதமன் ஆகியோர், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பொதுச் செயலர் ரீடா ஹரீஷ் தாக்குர் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைகளுக்கு வழக்குரைஞர்கள் நியமன விதிமுறைப்படி, அரசு தலைமை வழக்குரைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
1997ஆம் ஆண்டு வழக்குரைஞராக பதிவு செய்து பணியாற்றி வரும் பாலசுபிரமணியம் மற்றும் 1998ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்து பணியாற்றி வரும் கௌதம் ஆகியோர் 2023ஆம் ஆண்டு மூத்த சட்ட ஆலோசகர்களாக பதவி வகித்து வருகிறார்கள். இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில், மற்றொரு மூத்த சட்ட ஆலோசகர் ஜான் சத்யன், சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு அரசு இந்த நியமன உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள ஜான் சத்யன், சில ஆண்டுகளுக்கு முன்பு, உச்ச நீதிமன்ற கொலிஜியத்தால், உயர் நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், அவரது பெயரை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.