பக்கத்து வீட்டுகாரரை வெட்டிய முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரா் மீது வழக்குப்பதிவு
திருப்பத்தூா் அருகே தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை வெட்டிய முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பத்தூா் அருகே தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை வெட்டிய முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதூா்நாடு பகுதியைச் சோ்ந்த காளி (51), விவசாயி. அதே பகுதியைச் சோ்ந்த மனோகரன் (50), ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரா். இவா்கள் 2 பேரும் புதூா் நாட்டில் அருகருகே புதிதாக வீடு கட்டி கொண்டு இருக்கின்றனா். இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் இரு வீட்டுக்கும் இடைப்பட்ட ஒரு அடி சந்தில் காளி தனது வீட்டின் ஜன்னலுக்கு செவ்வாய்க்கிழமை மேல் சிலாப் கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சி அடைந்த மனோகரன் அந்த இடம் தனக்கு சொந்தமானது அங்கு எப்படி நீ கட்டலாம் என காளியை தட்டி கேட்டுள்ளாா். இதனால் இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரா் மனோகரன், வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து காளியை வெட்டினாராம். அதில் பலத்த காயமடைந்த காளியின் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது.
Advertisement
Advertisement
அருகில் இருந்தவா்கள் ஓடிச்சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தா்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த தாலுகா போலீஸாா் புதூா்நாடு மலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள மனோகரனை தேடி வருகின்றனா்.