மதுராந்தகம் அருகே போலி மருத்துவர்கள் இருவர் கைது
மதுராந்தகம் வட்டாரத்தில் போலி மருத்துவர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
மதுராந்தகம் வட்டாரத்தில் போலி மருத்துவர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
மதுராந்தகம் வட்டாரத்தில் உரிய மருத்துவக் கல்வியை பயிலாமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து பணம் சம்பாதித்து வருவதாக மாவட்ட சுகாதாரத் துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, மாவட்ட சுகாதார இணை இயக்குநர் மருத்துவர் சுந்தரராஜ் தலைமையில் மருத்துவக் குழுவினர் மதுராந்தகம் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். அதில், மாமண்டூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் கிளினிக்கில் ஆய்வு செய்தனர். அங்கு செங்கல்பட்டு தட்சிணாமூர்த்தி என்பவர் அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததைக் கண்டறிந்தனர். அவர் பிளஸ் 2 படித்துவிட்டு வேலை கிடைக்காததால், அலோபதி மருத்துவத் தொழிலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தட்சிணாமூர்த்தியை படாளம் காவல் நிலையத்தில் மருத்துவர் சுந்தரராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் புதன்கிழமை ஒப்படைத்தனர். அவரை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவரது அங்கு வந்த படாளம் காவல் துறையினர் கிளினிக்கில் நோயாளிக்கு பயன்படுத்த வைத்திருந்த மருந்து, மாத்திரைகளை கைப்பற்றினர்.
இதேபோல அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கத்தில் 10-வது படித்துவிட்டு மருத்துவத் தொழில் செய்து வந்த காண்டீபனை ஒரத்தி காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.