முகப்பு
திருவள்ளூர்

இருளில் தவிக்கும் குடியிருப்பு...!: அலட்சியம் காட்டும் மின்வாரியம்

சுங்குவார்சத்திரம் அருகே பாஞ்சாலி நகர் குடியிருப்புவாசிகளில் பலர் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து 5 ஆண்டுகளாகியும் இதுவரை மின்சாரம் வழங்கப்படாததால் மாணவர்கள்

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

சுங்குவார்சத்திரம் அருகே பாஞ்சாலி நகர் குடியிருப்புவாசிகளில் பலர் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து 5 ஆண்டுகளாகியும் இதுவரை மின்சாரம் வழங்கப்படாததால் மாணவர்கள் மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் அவலம் நீடிக்கிறது. 
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்டது புதுப்பட்டு கிராமம். இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 
இப்பகுதியில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு மூன்று சென்ட் நிலத்தை இலவசமாக அளித்து அதற்கு பட்டாவும் வழங்கியது. 
இந்த வீட்டுமனைகள் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளதால் பல ஆண்டுகளாக யாரும் அங்கு வீடு கட்டி குடியேறாமல் இருந்தனர். இந்நிலையில் இலவச வீட்டுமனைகள் பெற்ற சுமார் 15-க்கும் மேற்பட்டோர் கடந்த ஐந்து வருடங்களாக அப் பகுதியில் வீடு கட்டி குடியேறினர். 
இவர்களில் 4 பேர் தமிழக அரசின் பசுமை வீடுகள் மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டியுள்ளனர். 
இந்நிலையில் இப்பகுதி குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி சுங்குவார்சத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து ஐந்து ஆண்டுகளாகியும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. 
இதற்காக பல முறை மனுக்கள் அளித்தும் பயனில்லை. இதன்காரணமாக ஐந்து ஆண்டுகளாக மண்ணெண்ணெய் சிம்னி விளக்கு, மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் இப்பகுதி மக்களும், மாணவ, மாணவிகளும் வசிக்கவும், படிக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். 
இதுகுறித்து இந்த கிராம மக்கள் கூறுகையில், மின்இணைப்பு வழங்கக்கோரி சுங்குவார்சத்திரம் மின்வாரிய அலுவலகத்துக்கு 5 ஆண்டுகளாக நடையாய் நடந்து வருகிறோம். 
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் மின்கம்பங்கள் இருப்பு இல்லை, அதனால் மின் இணைப்பு வழங்க தாமதம் என்கின்றனர். மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் மிகுந்த சிரமப்படுகிறோம். மின்சாரம் இல்லாததால் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, டிவி உள்ளிட்ட எந்த வீட்டு உபயோகப் பொருள்களையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். மின்விளக்கு மற்றும் மின்விசறி இல்லாததால் இரவு நேரங்களில் வண்டுகள், பூச்சிகள் கொசுக்களால் தூங்கமுடியாத நிலை உள்ளது. 
அருகிலேயே வயல்வெளி உள்ளதால் இரவு நேரங்களில் பாம்புகளும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறோம். 
இதுதவிர பள்ளி செல்லும் குழந்தைகள் மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் தான் படித்து வருகின்றனர். இதனால் அவர்களால் சரியாக படிக்க முடியாமல் குறைந்த மதிப்பெண்களே பெற்று வருகின்றனர். தற்போது எங்கள் பகுதியில் நான்கு பேர் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். 
எனவே வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து சுங்குவார்சத்திரம் மின்வாரிய அலுவலகத்தின் உதவிப் பொறியாளர் ஒருவரிடம் கேட்டதற்கு, மின் இணைப்பு கேட்டு சில மாதங்களுக்கு முன்பு தான் விண்ணப்பம் வழங்கியுள்ளனர். 
அவர்கள் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் புதிதாக மின்பாதை அமைக்க வேண்டும் மின்பாதை அமைக்க சுமார் 17 மின்கம்பங்கள் தேவைப்படும். 
தற்போது மின்கம்பங்கள் இருப்பு இல்லாததால் அவர்களுக்கு மின்இணைப்பு வழங்க காலதாமதம் ஆகிறது. ஏப்ரல் மாதத்துக்குப் பிறது எங்களுக்கு மின்கம்பங்கள் வரவில்லை. இருக்கும் மின்கம்பங்களையும் வரும் மழைக் காலத்திற்காக இருப்பு வைத்திருக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால் மின் இணைப்பு வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து அப்பகுதிக்கு மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →