பள்ளி அளவில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வென்ற பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பாக்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கைப்பந்து அணி பங்கேற்றது. இப்போட்டியில் மாநில சாம்பியன்ஷிப் கோப்பையை இப்பள்ளி மாணவர்கள் வென்றனர்.
தொடர்ந்து மாணவர்கள் வியாழக்கிழமை பள்ளிக்கு திரும்பிய நிலையில், அவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் ரவிக்குமார் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி.டி.வேலுமயில் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாணவர்கள் தாங்கள் வென்ற கோப்பை மற்றும் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் வழங்கி, வாழ்த்துப் பெற்றனர்.
பின்னர், வெற்றி பெற்ற பள்ளியின் கைப்பந்து அணிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் ரூ. 5ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.