தமிழகத்தில்தான் 99 சதவீத கர்ப்பிணிகளுக்கு மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெறுகிறது. இதனால், தாய், சேய் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே பாலாபுரத்தில் மாவட்டத்தின் 55-ஆவது ஆரம்ப சுகாதார நிலையத்தின் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தலைமை வகித்தார். திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் வரவேற்றார். நிகழ்வில், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்துவைத்து, கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி சீர்வரிசைகள் வழங்கினர்.
தொடர்ந்து, அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசியது:
நாட்டிலேயே தமிழகத்தில்தான் சிறந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராம மக்களுக்கு தங்கு தடையின்றி மருத்துவ சேவை கிடைக்கும் நோக்கில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு, மருத்துவ மனைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில்தான் 99 சதவீத கர்ப்பிணிகளுக்கு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கப்படுகிறது. இதில் 70 சதவிகித பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. பாலாபுரத்தைச் சுற்றியுள்ள 30 ஆயிரம் பேருக்கு உரிய நேரத்தில் மருத்துவ சேவை வழங்கும் நோக்கில் பி.எம்.நரசிம்மன் எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் சிறுணியம் பலராமன், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் குழந்தைசாமி, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ், ஆவின் பால்வள முன்னாள் மாவட்டத் தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் டி.டி.சீனிவாசன், ஜெ.பாண்டுரங்கன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஆர்.இளங்கோவன், ஜெயராமன், சாந்தி பிரியா சுரேஷ், வட்டார சுகாதார ஆய்வாளர் அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் சந்திரகுமார் நன்றி கூறினார்.