ஆட்டோ நிறுத்தமாக மாறிய மருத்துவமனை வளாகம்: பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தை ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்துவதால் நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தை ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்துவதால் நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சிகிச்சை பெறுவோரைக் காண நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வதால் எந்த நேரமும் பரபரப்பாகவும், நெருக்கடி மிகுந்த இடமாகவும் மருத்துவமனை வளாகம் இருந்து
வருகிறது.
ஏற்கெனவே நோயாளிகளைப் பார்க்க இருசக்கர வாகனங்களில் வருவோர் மருத்துவமனை வளாகத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், வெளியில் நிறுத்த வேண்டிய ஆட்டோக்களை மருத்துவமனை வளாகத்திலேயே நிறுத்துகின்றனர். இதனால், மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு நோயாளிகளை காணவரும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதோடு, அரசு மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு வாகனங்களை நிறுத்துவதை ஒழுங்குபடுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏற்கெனவே மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை நிறுத்த குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி அரசு வாகனங்களைத் தவிர வேறு வாகனங்களை இங்கு நிறுத்தக்கூடாது. இதுபோன்ற வாகனங்களைக் கண்காணிக்க தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நோயாளிகளை ஏற்றி வருவதாகக் கூறி சிலர் ஆட்டோக்களை நிறுத்துகிறார்கள். இனிமேல் மருத்துவமனை வளாகத்திற்குள் அதிக அளவில் ஆட்டோக்கள் நிறுத்துவதை பாதுகாவலர்கள் கண்காணித்து தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.