ஊத்துக்கோட்டை அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
ஊத்துக்கோட்டை அருகே அரசு மதுபானக்கடை தொடங்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு
ஊத்துக்கோட்டை அருகே அரசு மதுபானக்கடை தொடங்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மகளிர் குழுவினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தோர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாரிடம் திங்கள்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தாராட்சி கிராம மக்கள் அனைவரும் விவசாயத்தை மையமாக வைத்து கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இதுவரையில் படிப்பறிவில்லாமல் இருந்த நிலையில், இந்த தலைமுறையினர் தான் உயர் கல்வி கற்கச் செல்கின்றனர். எங்கள் கிராமத்தில் இதுவரையில் எவ்விதமான பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.
இந்நிலையில், இப்பகுதியில் அரசு மதுபானக்கடை அமைப்பதற்கு அதிகாரிகள் இடம் பார்த்துச் சென்றுள்ளனர். இதனால், எங்கள் கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இங்கு மதுக்கடை அமைவதால் இளைஞர்கள் வாழ்வு சீரழியும் நிலை ஏற்படும். அதனால், எங்கள் கிராமத்தில் மதுக்கடையை அமைக்க வேண்டாம். இதை வலியுறுத்தி ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசு மதுபானக்கடை மண்டல மேலாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரிடம் தெரிவித்து மதுக்கடை அமைக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.