ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட திருப்பதி திருக்குடை ஊர்வலம் திருவள்ளூருக்கு சனிக்கிழமை வந்தது. அதனை பக்தர்கள் வரவேற்று, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
சென்னையில் இருந்து ஆண்டுதோறும் திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்துக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இதில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலிலிருந்து வரும் மாலை மற்றும் திருப்பதி திருக்குடை ஆகிய இரண்டும் தான் இந்த பிரம்மோற்சவத்தின் சிறப்பு ஆகும்.
அவ்வகையில், சென்னையில் இருந்து பல்வேறு வழித்தடங்கள் வழியாக இந்த திருக்குடைகள் வெள்ளிக்கிழமை இரவு திருவள்ளூர் வீரராகவர் கோயிலை வந்தடைந்தன. இந்த திருக்குடைகளை தேவஸ்தானம் சார்பில் வரவேற்று மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து, பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதையடுத்து, பெரியகுப்பம், திருவள்ளூர், ஜெயா நகர், எடப்பாளையம், தலக்காஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் திருப்பதி திருக்குடைகளை வழிபட்டனர்.
இதையடுத்து, சனிக்கிழமை காலை திருக்குடை ஊர்வலம் திருவள்ளூர் மணவாளநகரை வந்தடைந்தது. அதனை பக்தர்கள் வரவேற்று, வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த திருக்குடைகள் நமணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைந்து, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 16) திருமலை சென்றடைய உள்ளது. அங்கு மாடவீதியில் வலம் வந்து வஸ்திரம், மங்களப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகளிடம் பிற்பகல் 3 மணிக்கு திருக்குடை முறையாக சமர்ப்பிக்க இருப்பதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.