திருவள்ளூர்-காக்களூர் சாலையில் அடுத்தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளிக்காததால் அதிலிருந்த ரூ.50 லட்சம் ரொக்கப்பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
திருவள்ளூர் காக்களூர் புற வழிச்சாலையில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கி இயங்கி வருகிறது. வங்கியையொட்டி தானியங்கி பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்காக புதன்கிழமை அதிகாலையில் வாடிக்கையாளர் ஒருவர் வந்தாராம். அப்போது, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, திருவள்ளூர் கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே, போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல, திருவள்ளூர்-ஆவடி சாலையில் ராமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே மற்றொரு நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியுடன் இணைந்த தானியங்கி ஏடிஎம் இயந்திரத்தையும், அந்த பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள மற்றொரு வங்கி ஏடிஎம் இயந்திரத்தையும் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் உடைத்து பணம் திருட முயற்சித்துள்ளது.
ஆனால், இயந்திரத்தை முழுவதுமாக பெயர்த்து எடுக்க முடியாததாலும், உடைக்க முடியாமல் போனதாலும் பணத்தை திருடிச் செல்ல முடியவில்லை. இதன்காரணமாக, அந்த மர்ம கும்பல் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்று விட்டது. இதன்காரணமாக, 3 ஏடிஎம் இயந்திரங்களில் வைக்கப்பட்டிருந்த ரூ. 50 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போவதில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது.
இந்த ஏடிஎம் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. இரவு பாதுகாவலர்கள் யாரும் கிடையாது என்பதால் இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஏடிஎம்மை உடைத்து திருடிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
இதுதொடர்பாக திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக, கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் தலையில் குல்லா அணிந்த மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்யும் காட்சி பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.