குடும்பத் தகராறில் பெண் தற்கொலை: கணவர் கவலைக்கிடம்
புழல் அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தற்கொலைக்கு முயன்ற அவரது கணவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புழல் அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தற்கொலைக்கு முயன்ற அவரது கணவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, மாதவரத்தை அடுத்த புழல் ராஜன் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (61). இவரது மனைவி சுந்தரி (55). நடராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதை சுந்தரி கண்டித்துள்ளார். ஆனால் நடராஜன் தொடர்ந்து மது அருந்தி வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், மிகுந்த வேதனையில் இருந்த சுந்தரி புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது நடராஜன் வீட்டுக்கு வந்தபோது, சுந்தரி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, நடராஜனும் தூக்கிட்டு தற்கொலை முயன்றுள்ளார்.
அப்போது வீட்டுக்கு வந்த அவர்களது மகன் சுப்பிரமணி, தனது பெற்றோரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தார். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுந்தரி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். நடராஜன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, புழல் காவல் ஆய்வாளர் நடராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.