தீயில் கருகி விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு
திருத்தணி-கோரமங்கலம் கிராமம் அருகே சாலையோரம் இருந்த நாவல்மரம் தீயில் எரிந்து, சாலையில் விழுந்ததால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தணி-கோரமங்கலம் கிராமம் அருகே சாலையோரம் இருந்த நாவல்மரம் தீயில் எரிந்து, சாலையில் விழுந்ததால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தணி, மேல் திருத்தணி, அகூர், நத்தம், கோரமங்கலம், வீரகநல்லூர், எரப்பநாயுடு கண்டிகை, கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை வழியாக சித்தூர், வேலூர், பள்ளிப்பட்டு, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த நெடுஞ்சாலைகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலமரம், அரசமரம், புங்கமரம், நாவல், வேம்பு, புளிய மரம் உள்ளிட்ட பல வகையான மரங்கள் நடப்பட்டு நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோரமங்கலம் கிராமம் அருகே புதன்கிழமை நெடுஞ்சாலை ஓரமாக இருந்த குப்பையில் தீப்பற்றியது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்த நாவல் மரத்தின் அடிப்பாகத்தில் இருந்து மேல் பாகம் வரை தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து வாகன ஓட்டிகள், திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் மரக்கிளை எரிந்து சாலையில் விழுந்தது. இதனால் அச்சாலையில் அரை மணி நேரத்துக்குமேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.