அரசு, தனியார் தொழிற்சாலை பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திருவள்ளூர் அருகே அரசு பேருந்தும் தனியார் தொழிற்சாலை பணியாளர் பேருந்தும் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றது. அப்போது திருவள்ளூர் போளிவாக்கம் ஏரி தரைப் பாலம் அருகே சென்றபோது ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் தனியார் தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அதேபோல் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மணவாளநகர் காவல்துறை போலீசார் விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து விபத்தில் காயமடைந்தவர்களை உடனே திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | ஹேக் செய்யப்பட்ட பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு
திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலை வாகனங்களும் அரசு பேருந்துகளும் சென்று திரும்புகிறது. ஆனால், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை குறுகிய அளவில் இருப்பதால் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.