திருவள்ளூர்: ஊராட்சி அலுவலகத்தில் செயலாளர் தூக்கிட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே ஊராட்சி அலுவலகத்தில், மன உளைச்சல் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அருகே ஊராட்சி அலுவலகத்தில், மன உளைச்சல் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது மேல்நல்லாத்தூர் ஊராட்சி. இங்கு ஊராட்சி தலைவராக அரிபாபு உள்ளார். இந்த ஊராட்சி செயலாளராக கடம்பத்தூரைச் சேர்ந்த பாஸ்கர்(48) பணியாற்றி வந்தார். இவர் வழக்கம்போல சனிக்கிழமை காலை ஊராட்சி அலுவலகம் சென்று பணியில் இருந்தார்.
இந்நிலையில், அவர் திடீரென தனது அறையிலேயே மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஊராட்சி செயலாளர் தூக்கில் தொங்குவது கண்டு அவந்த வழியாக சென்ற கிராம மக்கள், ஊராட்சி தலைவர் அரிபாபு மற்றும் திருவள்ளூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் மணவாளநகர் காவல் நிலைய காவலர்கள்
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஊராட்சி செயலாளர் எழுதி வைத்திருந்த கடிதம் காவல்துறையிடம் சிக்கியது. அதில், 'நான் கடந்த 1998 முதல் செயலாளராக பணிபுரிந்து வருகிறேன். எனது பணியில் எந்த தவறும் நடக்காமல் பணி செய்து வந்துள்ளேன்.
தற்போது 1.1.20 முதல் 6.2.21 வரை ஊராட்சியில் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி என்னை இந்த தவறான முடிவுக்கு தள்ளி விட்டார்கள் என இக்கடிதம் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தகவலறிந்த ஊராட்சி அலுவலர்கள் சங்க தலைவர் மகேந்திரன் தலைமையில், அனைத்து ஊராட்சி செயலர்கள் அரசு மருத்துவமனை அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து திருவள்ளூர் காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில் ஊராட்சி செயலர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.