ஈரானின் புதிய தலைமை மதகுரு கோமாவில் உள்ளாரா? போரை இயக்குவது யார்?
ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி கோமாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்
ஈரான் நாட்டின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி கோமாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் நாட்டின் தலைமை மதகுருவான அயதுல்லா அலி கமேனி, பிப். 28-ல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் பலியானார். இதனைத் தொடர்ந்து, புதிய தலைமை மதகுருவாக அவரது மகன் மோஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருப்பினும், தலைமை மதகுருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதிலும், மோஜ்தபா கமேனி பொதுவெளிகளில் தோன்றவில்லை. அவரின் முதல் அறிக்கையும்கூட வியாழக்கிழமையில் (மார்ச் 12) செய்தியாளரால்தான் அரசுத் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது.
இந்த நிலையில், அயதுல்லா கமேனி மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது, மோஜ்தபா கமேனியும் காயமடைந்திருக்கலாம் என்றும், தாக்குதலில் அவரது ஒரு காலை இழந்திருக்கக் கூடும் என்றும் ஆங்கில செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவர் கோமாவால் பாதிக்கப்பட்டு, தெஹ்ரானின் சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் அவரது வயிற்றுப்பகுதி அல்லது கல்லீரல் சேதமடைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், மோஜ்தபா கமேனி கோமாவில் இருக்கிறார் என்றால், போரை யார் இயக்குகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதற்கும்கூட, தலைவர் என்ற ஒருவர் இல்லாமல்கூட போரை இயக்கும் ஓர் அமைப்பையும் அயதுல்லா கமேனி உருவாக்கியதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ரன் பை அ கோஸ்ட் (Run by a Ghost) என்ற அமைப்பின் மூலம் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி ஈரான் போர் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.