முகப்பு
திருவள்ளூர்

தொடர் மழை: பூண்டி ஏரியில் கூடுதல் செயலாளர் ஆய்வு

பூண்டி ஏரியில் பொதுப்பணித் துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, தலைமைப் பொறியாளர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:


திருவள்ளூர்: பூண்டி ஏரிப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதைத் தொடர்ந்து பொதுப்பணித் துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, தலைமைப் பொறியாளர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஏரி, குளங்களில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்த நிலையில் பூண்டி ஏரியில் கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் முரளிதரன், சென்னை மண்டல மேற்பார்வை பொறியாளர் முத்தையா உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பூண்டி ஏரியின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதகுகளின் மோட்டார்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து நீரியல் ஆய்வு மையத்திற்கு செல்லும் மதகில் கசிவு எதுவும் உள்ளதா எனவும், நீர்மட்ட அளவு கண்காணிக்கும் கேமரா சரியான முறையில் செயல்படுகிறதா என்பதையும் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து மேல் நடவடிக்கை குறித்த விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் தொடர்ந்து ஏரியின் நீர் மட்டத்தை கண்காணிக்கவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் இதுதொடர்பாக அவர் கூறுகையில், மாநில அளவில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டன. இதனால், ஏரி குளங்களுக்கு மழைநீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளச் சேதத்தால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு மற்றும் யூகலிப்டக்ஸ் கொம்புகள் அனைத்தும் ஒவ்வொரு பகுதியிலும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் வரத்து காரணமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல், பூண்டி ஏரிக்கான மழை நீர் வரத்து, கண்டலேறு நீர் வரத்து போன்றவைகளால் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி காலை முதல் பிற்பகல் வரையில் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றம் என்பது, மாலையில் 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்று இருகரையோரங்களில் கிராமங்களில் உள்ள கிராம பொதுமக்கள் பாதுகாப்பாகவும் இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்போது, கொசஸ்தலையாறு உபநீர் வடிநில கோட்ட பிரிவு செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், பூண்டி ஏரிக்கான உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.            

 இதைத் தொடர்ந்து ஏரிகளின் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் குறித்து அரசு உத்தரவிற்கு பின்னர் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மற்றும் கொசஸ்தலை ஆற்றில் 6 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →