கடினமான சூழ்நிலைகளைச் சமாளிப்பதுதான் முக்கியம்: பிரதமர் மோடி
ஈரான் போர், உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு தள்ளியிருப்பதாக பிரதமர் மோடி பேச்சு
உலகளாவிய நெருக்கடியை இந்தியா சமாளிக்கும் எந்தவொரு முயற்சியையும் விட்டுவிடவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தில்லியில் நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், "ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய காரணி என்பது சவால்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான்.
கோவிட்-19 பெருந்தொற்றைக் கண்டோம், பின்னர் ரஷியா - உக்ரைன் நெருக்கடி, இப்போது மற்றொரு பெரிய போர்.
இந்தப் போர் ஒட்டுமொத்த உலகையும் பெரும் எரிசக்தி நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. இத்தகைய கடினமான சூழ்நிலைகளில், நாம் எவ்வாறு சமாளிக்கிறோம் என்பது முக்கியம். சூழ்நிலைகளை அமைதியாகவும் பொறுமையாகவும் நாம் சமாளிக்க வேண்டும்.
பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதன் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் நாம் முன்னேற வேண்டும். அதில் அரசியல் கட்சிகள், ஊடகம், சமூக அமைப்புகள், தொழில்துறை, இளைஞர்கள், கிராமங்கள், நகரங்கள் என அனைவருக்கும் பங்கு உண்டு.
கோவிட்-19 பெருந்தொற்றின்போது, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான நாட்டின் திறன் அதிகரிப்பதையும் நாம் கண்டோம். இன்று நாடு மற்றொரு சவாலை எதிர்கொள்கிறது.
இந்த நாள்களில் எல்பிஜி பற்றி நிறைய வதந்திகளும் உள்ளன. சிலர் பீதியை உருவாக்குகின்றனர். இந்த நேரத்தில் அவர்கள் பற்றி அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
ஆனால், அவ்வாறு செய்வதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவர்கள் குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கிறார்கள்.
போரினால் ஏற்பட்ட இந்த உலகளாவிய நெருக்கடியின் தாக்கத்தால் எந்த நாடும் பாதிக்கப்படவில்லை; குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாவும் எந்தவொரு முயற்சியையும் விட்டுவிடவில்லை. இதனைச் சமாளிக்க பல்வேறு நிலைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்தில், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடனும் இதுகுறித்து நான் விவாதித்தேன். விநியோகச் சங்கிலியில் உள்ள தடைகளை சமாளிக்க தொடர்ச்சியான முயற்சிகளும் நடந்து வருகின்றன.
2014-க்கு முன்பு, நெருக்கடி காலங்களில் கச்சா எண்ணெய்யை சேமிக்கும் திறன் கொண்ட பெட்ரோலிய இருப்பு இந்தியாவில் இல்லை. ஆனால், இன்று 50 லட்சம் டன்களுக்கு அதிகமான பெட்ரோலிய இருப்பு உள்ளது. இதனை மேலும் அதிகரிப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் சுத்திகரிப்புத் திறனை ஆண்டுதோறும் 40 மில்லியன் டன்களுக்குமேல் அதிகரித்துள்ளோம். அதனால்தான், உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது.
எனது 140 கோடி மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றை ஒன்றிணைந்து வெளியேற்றியதுபோல, இந்த உலகளாவிய நெருக்கடியையும் நாம் சமாளிப்போம். அரசின் ஒவ்வொரு முடிவிலும் பொது நலனே முதன்மையானதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.