திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையால் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டுநர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
இதில் திருத்தணியில் அதிகளவாக 116 மி.மீ., திருவாலங்காடு பகுதியில் 95 மி.மீ என மொத்தம் 968 மி.மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் அடித்த நிலையிலும், மாலையில் லேசான சாரல் மழை மட்டும் பெய்து வந்தது. இந்த நிலையில் கருமேகம் சூழ்ந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் தொடங்கிய மழை, புதன்கிழமை அதிகாலை வரையில் இடையே விட்டு, விட்டு மழை பெய்தது.
இதேபோல் பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் சாலைகளிலும், வீரராகவர் திருக்கோயில் வளாகம், ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைத் தண்ணீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதேபோல், நீண்ட நாள்கள் கழித்து மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழை அளவு: இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி பதிவான மி.மீட்டரில் மழை அளவு வருமாறு:
ஜமீன்கொரட்டூர் - 36 என மொத்தம் 968 மி.மீட்டரும், சராசரியாக 69.14 மி.மீ மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக திருத்தணியில் - 116 மி.மீ. மழையும், குறைந்தளவாக ஜமீன் கொரட்டூரில் 36 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
பூண்டி ஏரியில் நீர்மட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையால் ஏரி, குளங்களுக்கு கால்வாய் மூலம் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தின் உயரம் 35 அடியாகும். இதில் 3231 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்க முடியும். தற்போது மழைக்கு பின் புதன்கிழமை காலை நிலவரப்படி 33.15 அடி உயரமும், 2565 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
மேலும், பூண்டி நீர்தேக்கத்திற்கு 765 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. இதில் சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக மட்டும் பேபி கால்வாய் வழியாக 64 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே இன்னும் மழை பெய்தால் நீர் மட்டம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.