முகப்பு
திருவள்ளூர்

ஆணவ படுகொலை: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
ஆணவ படுகொலை: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
பகிர்:

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்த கௌதமன் ஆணவ படுகொலை சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அருகே காரணி கிராமத்தில் பட்டியலின பெண்ணை காதல் திருமணம் செய்த கௌதமன் கடந்தவாரம் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவிக்கு தெரியாமல் எரித்து தகனம் செய்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த ஆணவ படுகொலை சம்பவத்தைக் கண்டித்து திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை முன்பு திங்கள்கிழமை விடுதைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தலைவரும், மக்களவை தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அருகே காரணி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின பெண்ணை காதலித்து கௌதமன் திருமணம் செய்து வாழ்ந்த நிலையில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் பெற்றோர் வீட்டிற்கு வந்த கௌதமை, ஆணவ படுகொலை செய்து தூக்கிட்டுள்ளனர். அதோடு, மனைவிக்கு தெரியாமல் சடலத்தையும் எரித்து தகனம் செய்து அழித்தனர். இது தொடர்பாக ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையிலும் காவலர்கள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டியலின பெண்ணை காதலித்து திருமணம் செய்த காரணத்திற்காகவே கெளதமனை ஆணவ படுகொலை செய்துள்ளனர். அதனால் பாதிக்கப்பட்ட அமுலுவுக்கும், குழந்தைக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

அதனால் இந்த வழக்கை உள்ளூர் காவலர்கள் விசாரணை செய்யக் கூடாது. உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் இயங்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்து சிறப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இனி வருங்காலத்தில் இதுபோன்ற ஆணவ படுகொலை நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசு சட்டம் இயற்ற வேண்டும். மேலும், ஆணவக் கொலையை தற்கொலை எனக்கூறி மூடிமறைத்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சிபிஐ மூலம் விசாரணை மேற்கொள்ளவும் வலியுறுத்துவோம் என அவர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் சித்தார்த்தன், கோபி நயினார் மற்றும் நீலவானத்து நிலவன், பாலசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.