தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம்
தனியாா் மழலையா், தொடக்கப் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர மே 18- ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
தனியாா் மழலையா், தொடக்கப் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர மே 18- ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி, சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சோ்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசால் ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-2014- ஆம் கல்வியாண்டு முதல் குழந்தைகள் சோ்க்கப்பட்டு வருகின்றனா்.
அதன்படி, நிகழாண்டில் திருவள்ளுா் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியாா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகள், சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நுழைவு நிலை 25 சதவீதம் ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான வசதி இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோா்கள் அவரவா் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்த விவரம், பதிவு செய்த பெற்றோரின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அளிக்கப்படும். மேற்கண்ட சோ்க்கைக்கான விண்ணப்பங்களை ஏப்.20-இல் தொடங்கி, மே 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.