சின்னசேலம் அருகே கார் விபத்தில் மாமியார், மருமகள் பலி!
சின்னசேலம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி
சின்னசேலம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சென்னையில் இருந்து வெங்கடேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் கோயம்புத்தூருக்குச் சென்றுள்ளார். அவரது மனைவி உபாசனா (28) காரை ஓட்டிச் சென்றுள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கோவைக்கு மாறுதலாகி விட்டார்.
இவர்களுடன் வெங்கடேஷின் தாயார் உஷா (72), அவரின் குழந்தைகள் இருவரான அக்சத் 99), அங்கீத் (7) மற்றும் அவர்களின் உறவினரான சிவக்குமார் (55) என உள்ளிட்ட 6 பேரும் காரில் சென்றுள்ளனர்.
சென்னையிலிருந்து உளுந்தூர்பேட்டை வழியாக வேப்பூர் சென்று, அங்கிருந்து சேலம் செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை சுமார் 5.30 மணியளவில் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட தத்தாதிரிபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கார் நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி, மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் உபாசனாவும், அவரது மாமியார் உஷாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வெங்கடேஷ், அவரது இரு குழந்தைகள் மற்றும் சிவக்குமாரும் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.