திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே இரு வேறு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 மாணவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டு படுகாயம் அடைந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, திருவாலங்காடு, மணவூர், மோசூர், கடம்பத்தூர், திருவள்ளூர் ஆகிய பகுதியிலிருந்து சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரிக்கு மாணவர்கள் புறநகர் ரயிலில் பயணம் செய்து படித்து வருகின்றனர். இந்த மாணவர்களிடையே ரூட் தல விவகாரத்தில் ரயிலில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சம்பவமும் நடைபெற்றது.
இதற்கிடையே கடந்த ஆண்டில் ஒரு மாணவனை வேறு கல்லூரி மாணவர்கள் அடித்து துன்புறுத்தியதால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடைபெற்றது. இதனால் ரயில்வே காவல் துறையினர் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் அருகே ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவனுக்கு தலையில் அரிவாள் வெட்டியதால் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த மாணவனை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் துணைக் கண்காணிப்பாளர் சந்திரதாசன் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். அதில் தக்கோலம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் உள்பட மாணவர்கள் 3 பேர் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கடம்பத்தூர் காவல் நிலைய காவல் துறையினர் 10 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து 2 கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.