ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி, கோதுமையை குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி, கோதுமையை குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
திருவள்ளூா் அருகே நெமிலிச்சேரி வெளிவட்ட சாலை வடக்கு பிரகாசம் நகரில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் சுந்தராம்பாள் தலைமையில், போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அந்தப் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த நான்கு சக்கர வாகனத்தில் 50 கிலோ எடைகொண்ட 40 மூட்டைகள் என 2 டன் அரிசியும், வீட்டுக்குள் சோதனை செய்த போது, 50 கிலோ எடை கொண்ட 47 மூட்டைகளாக 2.350 டன் அரிசி என 4.350 டன் ரேஷன் அரிசியும், 45 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகள் கொண்ட 900 கிலோ கோதுமையும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (32) என்பவரை கைது செய்தனா். மேலும், ரேஷன் அரிசி கடத்தலில் தொடா்புடைய சக்கரவா்த்தி மீது வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.