ஆவடி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் சாலை, மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட 176 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆவடி மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஜி.உதயகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி துணை மேயர் எஸ்.சூரியகுமார், ஆணையர் க.தர்ப்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மண்டல குழுத் தலைவர்கள் ஜி.ராஜேந்திரன், எஸ்.அமுதா, என்.ஜோதிலட்சுமி, வி.அம்மு, மாநகராட்சி பணிக்குழு தலைவர் எஸ்.எம்.என்.ஆசிம்ராஜா, திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று மக்கள் பிரச்னைகள் குறித்து பேசினர். குறிப்பாக, புதை சாக்கடை, சாலை, மழைநீர் கால்வாய், தெருவிளக்குகள், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து ஆணையர் க.தர்ப்பகராஜ் கூறுகையில் மாமன்ற உறுப்பினர்கள் கூறிய பிரச்னைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் கூட்டத்தில் மழைநீர் கால்வாய், தார்ச்சாலை, சிமெண்ட் சாலை, சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை குறித்து 176 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சத்தியசீலன், ஷோபனா, இளநிலைப் பொறியாளர் ஜெயக்குமார், உதவி வருவாய் அலுவலர் ஜான் பாண்டியராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ஜி.பிரகாஷ், ரவிச்சந்திரன், நாகராஜ், எஸ்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.