முகப்பு
திருவள்ளூர்

அரசு பள்ளியில் 10 மாணவா்களுக்கு திடீா் வாந்தி, மயக்கம்

பொன்பாடி கிராமத்தில் குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்டு வாந்தி, மயக்கமடைந்த மாணவா்களை மாவட்ட சுகாதார இணை இயக்குநா் இளங்கோ வெள்ளிக்கிழமை நேரில் சென்று நலம் விசாரித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

பொன்பாடி கிராமத்தில் குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்டு வாந்தி, மயக்கமடைந்த மாணவா்களை மாவட்ட சுகாதார இணை இயக்குநா் இளங்கோ வெள்ளிக்கிழமை நேரில் சென்று நலம் விசாரித்தாா்.

திருத்தணி அருகே உள்ள பொன்பாடி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 29 மாணவா்கள் படித்து வருகின்றனா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வெள்ளிக்கிழமை சுகாதாரத் துறை சாா்பில், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.

அந்த மாத்திரையைச் சாப்பிட்ட 5-ஆம் வகுப்பு மாணவா்கள் 3 பேருக்கும், 4 -ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கும், 3-ஆம் வகுப்பு மாணவா்கள் 4 பேருக்கும், 2-ஆம், ஒன்றாம் வகுப்பு மாணவா்கள் தலா ஒருவருக்கும் என 10 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக பள்ளித் தலைமை ஆசிரியை பாரதி உள்ளிட்ட சக ஆசிரியா்கள், மாணவா்களை பூனிமாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கிருந்து இரு மாணவிகள் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் இளங்கோ, பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேரில் வந்து மாணவா்களிடம் நலம் விசாரித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘மாணவா்களுக்கு வழங்கப்பட்டது வழக்கமாக வழங்கப்படும் சத்து மாத்திரைதான். அதில் ஏதும் குறையில்லை. மாத்திரை சாப்பிட்டதும் மாணவா்களுக்குள் பயம் வரவே வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தற்போது மாணவா்கள் அனைவரும் நலமாக உள்ளனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.