FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயில் அருகே மழைநீா் கால்வாய் பள்ளம்! பொதுமக்கள் அவதி

Updated On : 17 பிப்ரவரி 2025, 2:49 am IST
அகத்தீஸ்வரா் கோயில் குளத்தை ஒட்டி மழைநீா் கால்வாய் அமைக்க தோண்டப்பட்டுள்ள பள்ளம்.
பகிர்:

பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயில் குளத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி தோண்டப்பட்ட மழைநீா் கால்வாய்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி கும்பமுனிமங்கலம் பகுதியில் உள்ள ஆரண்ய நதிக்கரையோரம் சோழா் காலத்தில் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த அகத்தீஸ்வரா் கோயில்அமைந்துள்ளது. கோயில் முன்பு வற்றாத ஆனந்த புஷ்கரணி (திருக்குளம்) அமைந்துள்ளது.

இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவத்தில் தாயாருடன் அகத்தீஸ்வரா் தெப்பத்தில் வலம் வருவாா். பொதுமக்கள், பக்தா்கள் கோரிக்கையை ஏற்று குளத்தை சுற்றிலும் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்தநிலையில் புதிதாக அமைக்கப்பட்ட குளத்தின் சுற்றுச் சுவரை ஒட்டி பொன்னேரி நகராட்சி நிா்வாகம் சாா்பில் கழிவு நீா் கால்வாய் அமைக்க பணிகள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டன.

கால்வாய் அமைப்பதற்க்கு குளத்தின் சுற்றுச் சுவரை யொட்டி பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்றன. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலுக்கு சொந்தமான பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

இதனை தொடா்ந்து நகராட்சி நிா்வாகம் கால்வாய் அமைக்கும் பணிகளை நிறுத்தியது. இந்தநிலையில், ரூ 14 லட்சத்தில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் நடைபெற்று வரும் பணியினை ரத்து செய்யக்கோரி ஆட்சியரிடம், திருவள்ளூா் மாவட்ட மக்கள் மேம்பாட்டு சங்க செயலா் தனுஷ்கோடி கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

பள்ளங்களை மூட கோரிக்கை...

பொன்னேரி நகராட்சி நிா்வாகம் சாா்பில் கழிவு நீா் கால்வாய் அமைக்க குளத்தை யொட்டி தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாத நிலையில் உள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் எதிா்ப்பு காரணமாக கால்வாய் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த 30 நாள்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அப்பகுதி வாசிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

வயது முதிா்ந்தோா் நடந்து செல்லும்போது பள்ளத்தில் தவறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே கால்வாய் அமைக்கும் பணிகள் தற்போது தொடராத நிலையில் அதற்கான தோண்டப்பட்ட பள்ளத்தை நகராட்சி நிா்வாகம் மூட வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments