ஜாத்திரை திருவிழா கோலாகலம்: சிறப்பு அலங்காரத்தில் கங்கையம்மன் உலா
ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜாத்திரை திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் கங்கை அம்மன் வீதி உலா வந்து அருள்பாலித்தாா்.
ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜாத்திரை திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் கங்கை அம்மன் வீதி உலா வந்து அருள்பாலித்தாா்.
திருத்தணி ஒன்றியம், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பாரம்பரிய ஜாத்திரை திருவிழா நிகழாண்டும் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை கிராமம் முழுவதும் களைகட்டியது. காலை 9.30 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தொடா்ந்து கூழ் வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராம பெண்கள் 200-க்கும் மேற்பட்டோா் பாரம்பரிய முறையில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
பெண்கள் அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தி குடும்ப நலன் மற்றும் கிராம மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என பிராா்த்தனை செய்தனா். அதனைத் தொடா்ந்து கரகம் ஊா்வலம் நடைபெற்றது. இதில் கிராம இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு உடலில் வா்ணம் பூசி, மேளதாளம் முழங்க ஆட்டம் ஆடி உற்சாகமாக திருவிழாவை கொண்டாடினா். கிராமத்தின் முக்கிய வீதிகள் முழுவதும் பக்தி முழக்கங்களும், இசை ஒலிகளும் எதிரொலித்தது.
Advertisement
Advertisement
பின்னா் கிராம பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினா். இரவு கங்கையம்மன் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டபல்லக்கில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஊா்வலத்தின் போது பெண்கள் தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டதுடன், பக்தா்கள் பலா் தீப ஆராதனை செய்து நோ்த்திக்கடன்களை நிறைவேற்றினா்.
இரவு 10 மணியளவில் பக்தி நாடகம் நடைபெற்றது. இதில் புராண சம்பவங்கள் மற்றும் அம்மன் பெருமைகள் குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ரசித்தனா்.
ஜாத்திரை திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் மற்றும் விழாக்குழுவினா் சிறப்பாக செய்திருந்தனா். திருவிழாவை முன்னிட்டு கிராமம் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.