சேத்துப்பட்டு முஸ்லிம் மக்களின் மயானத்துக்கு சாலை, மின் விளக்கு, தண்ணீர் வசதிகள் செய்து தரப்படும் என, போளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.வி.சேகரன் தெரிவித்தார்.
கே.வி.சேகரன் எம்.எல்.ஏ, போளூர், சேத்துப்பட்டு, பெரணமல்லூர் ஒன்றியங்களில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை நேரில் கேட்டறிந்து, சட்டப்பேரவை உறுப்பினர் நிதியின் மூலம் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அவர், சேத்துப்பட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த காலங்களில் சேத்துப்பட்டு நகருக்குக் குடிநீர் வழங்கிய குளத்தைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, பழம்பேட்டை முஸ்லிம் மக்களின் மயானத்தைப் பார்வையிட்டார். அப்போது அவர், மயானத்துக்கு சாலை, மின் விளக்கு, தண்ணீர் வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தார். நகரச் செயலர் இரா.முருகன், ஒன்றியச் செயலர் மனோகரன், மாவட்ட இலக்கிய அணித் துணைச் செயலர் சேகர், முன்னாள் பேருராட்சி மன்ற உறுப்பினர் அப்துல் ரஷீத், ரோட்டரி சங்கச் செயலர் முகமது சித்திக், ஆதாம், சுக்கூர் ஆகியோர் உடனிருந்தனர்.