தமிழக மீனவர்களைத் தாக்கிய இந்திய கடலோரக் காவல் படையினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.
திருவண்ணாமலை தமிழ்ச் சங்கம் சார்பில், தமிழகப் பெருவிழா நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவர் அருள்வேந்தன் பாவைச்செல்வி தலைமை வகித்தார். சங்கச் செயலர் க.காதர்சா, பொருளாளர் சீனி.கார்த்திகேயன், முன்னாள் துணைச் செயலர் ஜோ.ஞானசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்புச் செயலர் மா.க.சிவக்குமார் வரவேற்றார். இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல் படையினர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இதற்குக் காரணமான வீரர்களைப் பணி நீக்கம் செய்துவிட்டு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
விழாவில், சங்கத்தின் துணைத் தலைவர் தே.பாவைச்செல்வி அருள்வேந்தன், இணைச் செயலர் கி.பூவேந்தரசு, துணைத் தலைவர்கள் சி.எஸ்.துரை, சொ.சேகர், எழுத்தாளர் டி.ராஜேந்திரன், சர்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவர் பா.இந்திரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.