போளூர் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் பெண் உயிரிழந்தார்.
கலசப்பாக்கத்தை அடுத்த பெரியஅல்லியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி பூமல்லி (35). இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் போளூருக்கு வந்து வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். போளூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில், சிவக்குமார், பூமல்லி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். பின்னர், இருவரும் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு பூமல்லி உயிரிழந்தார். இதுகுறித்து போளூர் போலீஸார் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநரான திருப்பதியைச் சேர்ந்த
பிரசாத் மகன் ரவிவை (24) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.