முருகன் கோயில்களில் தைப்பூச விழா கோலாகலம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள கம்பத்திளையனார் சன்னதியில் உள்ள மூலவர் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், திருவண்ணாமலை வடவீதி ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி கோயில், திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி கோயில்களிலும் தைப்பூசத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இந்தக் கோயில்களில் புதன்கிழமை காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வேட்டவலம்: வேட்டவலம், ஜமீன் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில் காலை 7 மணிக்கு ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீசிங்காரவேல்
முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. வெண் பொங்கல், கடலை படையலிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
வேட்டவலம், களத்துமேட்டுத் தெருவில் உள்ள வள்ளலார் திருச்சபையில் ந.சுப்பிரமணி பாரதியார் தலைமையில், அதிகாலை 5 மணிக்கு தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, சொற்பொழிவு, சிறப்புப் பட்டிமன்றம், விவாத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை, மதியம், இரவு 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வேட்டவலம், கடை வீதியில் உள்ள சன்மார்க்க சங்கம் சார்பில் காலை 9 மணிக்கு அலங்கரிக்ப்பட்ட தேரில் வள்ளலார் மாட வீதியுலா நடைபெற்றது. வீதியுலாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல, வேட்டவலத்தை அடுத்த வைப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 96-ஆவது ஆண்டு தைப்பூசத் திருவிழாவும், வேட்டவலத்தை அடுத்த நெய்வாநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் 93-ஆவது ஆண்டு தைப்பூசத் திருவிழாவும் நடைபெற்றன.
செங்கம்: செங்கத்தை அடுத்த மண்மலை முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி, சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். செங்கத்தை அடுத்த தொரப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் 22-ஆம் ஆண்டு தைப்பூச விழா நடைபெற்றது. விழாவையொட்டி, காலையில் தீமிதி விழா, காவடி எடுத்தல், சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றன.
தொடர்ந்து, பக்தர்களின் மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தல், முள் மிதித்தல்,கொதிக்கும் எண்ணெயில் வடையை கையால் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், நாவில் அலகு குத்தியும், செக்கு, உரல் இழுத்தும், டெம்போ மீது செடல் சுற்றி வீதி வலம் வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சிகளை பார்வையிடவும், சுவாமியை தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.