கூட்டுறவு கடன் சங்கத் தேர்தல்: இரு தரப்பினர் கடும் வாக்குவாதம்
வேட்டவலம் அருகே கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியலை வெளியிடுவதில் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வேட்டவலம் அருகே கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியலை வெளியிடுவதில் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வேட்டவலத்தை அடுத்துள்ளது நாடழகானந்தல் புதூர் கிராமம். இங்கு இயங்கி வரும் எச்.எச்.498 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நாடழகானந்தல், செல்லங்குப்பம், வேளானந்தல், கோணலூர், காட்டு மலையனூர் கிராமங்களைச் சேர்ந்த 11 பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், இந்த சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்கான மனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
புதன்கிழமை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தயார் செய்தனர்.
ஆனால், நாங்கள் சொல்லும் வரை இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடக் கூடாது என்று அதிமுகவினர் தகராறு செய்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அறிவித்தபடியே புதன்கிழமை இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்த வேட்டவலம் போலீஸார் நாடழகானந்தல் புதூர் கிராமத்தில் குவிக்கப்பட்டன.
இதையடுத்து, 33 பேர் அடங்கிய இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.சிவலிங்கம் அறிவிப்புப் பலகையில் ஒட்டினார். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.