ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஹென்ரிச் கிளாசனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மீண்டும் விளையாடவைக்க முயற்சிக்க வேண்டும் என கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஹென்ரிச் கிளாசனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மீண்டும் விளையாடவைக்க முயற்சிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரரான ஹென்ரிச் கிளாசன் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கிளாசன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கிளாசன் சன்ரைசர்ஸ் அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்து வருகிறார். இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 414 ரன்கள் குவித்துள்ளார். அதில் 4 அரைசதங்கள் அடங்கும்.
Advertisement
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஹென்ரிச் கிளாசனை அவரது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட வைக்க முயற்சிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இதுவரை தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பையை வென்றது கிடையாது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஹென்ரிச் கிளாசனை அழைத்து அவரிடம் மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட வேண்டும் என வலியுறுத்த வேண்டும். அப்படி செய்தால், முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்ல முயற்சி செய்யும் தென்னாப்பிரிக்க அணிக்கு அது மிகவும் உதவியாக இருக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2018 முதல் 2025 ஆம் ஆண்டு இடைவெளியில் ஹென்ரிச் கிளாசனின் ஏழு ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் அவர் 3245 ரன்கள் குவித்துள்ளார். 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2141 ரன்களும், 58 டி20 போட்டிகளில் 1000 ரன்களும் எடுத்துள்ளார். 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கிளாசன், 104 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.