விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவுறுத்தினார்.
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவுறுத்தினார்.
செங்கத்தை அடுத்த குப்பனத்தம், கிளையூர், கல்லாத்தூர், பன்ரேவ் ஆகிய மலை கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் குப்பனத்தம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில் செங்கம் வட்டாட்சியர் உதயகுமார் வரவேற்றார். திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு, வருவாய்த் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, வேளாண்மை, தோட்டக்கலைத் துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம், சமூக பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் 1,325 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: குப்பனத்தம், கிளையூர் உள்ளிட்ட மலை கிராம பகுதியானது முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாகும்.
இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் கடந்த காலங்களைப்போல தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும்.
இதற்காக, வேளாண் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உரிய ஆலோசனைகளை பெற வேண்டும். வேளாண் பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதால் தண்ணீரை சேமிப்பதுடன், அதிக மகசூலும் பெறலாம். மேலும், பழைய விவசாய முறைகளை கைவிட்டு, நவீன விவசாயத்துக்கு விவசாயிகள் மாற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, துறை வாரியாக பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆட்சியர் விளக்கிக் கூறினார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கர், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரேணுகா, கல்லாத்தூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் எம்.சி.அசோக், குப்பனத்தம் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், ஜெயபாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, அறிவுமணி உள்பட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.