மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியின் உத்தரவின்பேரில், செய்யாறு பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறை இலவசக் கழிப்பறையாக மாற்றப்பட்டது.
செய்யாறில் அமைக்கப்பட்ட வாக்காளர் சீராய்வு மையத்தை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கடந்த 9-ஆம் தேதி வந்தார். பின்னர், செய்யாறு பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த கட்டணக் கழிப்பறையை ஆட்சியர் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கு வந்த பேருந்து பயணிகள், பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாகவும், கட்டணக் கழிப்பறையை இலவச கழிப்பறையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, செய்யாறு நகராட்சி ஆணையரிடம் கட்டணக் கழிப்பறையை இலவசக் கழிப்பறையாக மாற்றிட உத்தரவிட்டார். அதன்படி, கட்டணக் கழிப்பறை இலவச கழிப்பறையாக மாற்றப்பட்டு வியாழக்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. கட்டணக் கழிப்பறையை இலவசக் கழிப்பறையாக மாற்றி உத்தரவிட்டதற்காக மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்களும், பேருந்து பயணிகளும் நன்றி தெரிவித்தனர்.