திருவண்ணாமலையில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்றி நடைபெற்று வந்த விநாயகர் கோயில் கட்டும் பணியை அதிகாரிகள் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
திருவண்ணாமலை - பெரும்பாக்கம் சாலையில், நகராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து, கோயில் கட்டப்போவதாகக் கூறி பொதுமக்களிடம் வசூலில் ஈடுபட்டனராம். மேலும், சில தினங்களுக்கு முன்பு கோயில் கட்டும் பணியும் தொடங்கப்பட்டதாம்.
இதுகுறித்து திருவண்ணாமலை நகராட்சி அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றன. இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை குறிப்பிட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு, அனுமதியின்றி நடைபெற்ற கோயில் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்கும் நகராட்சி அதிகாரிகள் கொண்டு வந்தனர்.