திருவண்ணாமலையில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணியை நிறுத்திவிட்டு தனியார் நிறுவன ஊழியர்கள் திரும்பிச் சென்றனர்.
திருவண்ணாமலை, கிரிவலப் பாதை, இடுக்குப் பிள்ளையார் கோவில் 3-ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டு மனையில் தனியார் நிறுவனத்தின் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதையறிந்த பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கக்கூடாது என்று கூறி தனியார் நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, தனியார் நிறுவன ஊழியர்கள் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிட்டனர். இதையடுத்து, பொதுமக்களும் கலைந்து சென்றனர்.