முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறில் வேதபுரீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா

செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் பிரம்மோத்ஸவ விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.

Updated On : 13 பிப்ரவரி 2019, 10:15 am IST
பகிர்:

செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் பிரம்மோத்ஸவ விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.
திருவோத்தூர் ஸ்ரீபாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் பிரம்மோத்ஸவ விழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை சந்திரசேகரர் சுவாமிக்கு அபிஷேகம், அறுபத்து மூன்று நாயன்மார்கள் புறப்பாடு, இரவு அம்மன் தோட்ட உத்ஸவம், திருக்கல்யாண யானை வாகன சேவை ஆகியவை நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை ரத சப்தமியையொட்டி, தேர்த் திருவிழா விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயில் அருகே 3 தேர்கள் அலங்கரிக்கப்பட்டன. முதல் தேரில் விநாயகரும், இரண்டாம் தேரில் வேதபுரீஸ்வரரும், மூன்றாம் தேரில் பாலகுஜாம்பிகை அம்மனும் தேர்களில் ஒன்றன் பின் ஒன்றாக வலம் வந்தனர். சந்நிதி தெருவில் தொடங்கிய தேரோட்டம், ஆற்றகரை தெரு, குமரன் தெரு வழியாக வலம் வந்து மீண்டும் கோயில் கோபுரம் முன் நிறைவடைந்தது.
வீதிகளில் வலம் வந்த தேர்களை பொதுமக்கள் குடும்பத்தினருடன் இணைந்து தேங்காயுடன் கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர். 
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதில், செய்யாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.