செங்கத்தில் தொழிலாளியிடம் ரூ. ஒரு லட்சத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் பெங்களூரு - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையோரம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கிக் கிளையில் செங்கம் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான அய்யனார், தனது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக ரூ. ஒரு லட்சத்தை பையில் வைத்து கொண்டுவந்தார்.
அப்போது, வங்கியின் முன் இருந்த மர்ம நபர்கள் இருவர், 10 ரூபாய் நோட்டை கீழே போட்டு அய்யனாரின் கவனத்தை திசை திருப்பியுள்ளனர். பின்னர், அய்யனார் வைத்திருந்த பணப்பையை பிடிங்கிக்கொண்டு அருகே தயாராக நிறுத்திவைத்திருந்த இரு சக்கர வானத்தில் ஏறிச் சென்றனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த அய்யனார், திருடன், திருடன் என கூச்சலிட்டார். எனினும், அருகிலிருந்தவர்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அய்யனார் அளித்த புகாரின் பேரில், செங்கம் போலீஸார் பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.