திருவண்ணாமலையில் தமிழ்நாடு காந்தி பேரவை சார்பில், நகைச்சுவை பட்டிமன்றமும், பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் திங்கள்கிழமை நடைபெற்றன.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு காந்தி பேரவையின் நிறுவனர் தலைவர் பி.எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார்.
பேரவை துணைத் தலைவர்கள் லதா பிரபுலிங்கம், ஏ.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரவை பொதுச் செயலர் ந.சண்முகம் வரவேற்றார்.
திருவண்ணாமலை சேஷாத்திரி மடத்தின் செயலர் ஆர்.முத்துக்குமாரசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, இறைபக்தி - காந்திய சிந்தனை - சமூக பொறுப்பு ஆகியவை இன்றைய இளைஞர்களிடையே தளர்கிறதா, தழைக்கிறதா என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.
நடுவர் பொறுப்பேற்ற பேச்சாளர் கு.சபரி, இறைபக்தி - காந்திய சிந்தனை - சமூக பொறுப்பு தழைக்கிறது என்று தீர்ப்பு வழங்கினார். தொடர்ந்து, பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், கரகாட்டம், கிராமிய நடனம், பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு காந்தி பேரவை நிர்வாகிகள் கே.டி.எஸ்.மாணிக்கவேலு, கலா விஜயகுமார், வி.கே.அருண்குமார், மோகன், மூர்த்தி, கோவிந்தசாமி, சுப்பிரமணி, கனகராஜ், சரண்யா, மருத்துவர்கள் ராஜசேகரன், மணி, வேலாயுதம் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.