கோயிலில் அன்னதானம் சாப்பிட்ட 32 பேர் சுகவீனம்
வேட்டவலம் அருகே ஸ்ரீசுப்ரமணியர் சுவாமி கோயிலில் அன்னதானம் சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட 32 பேருக்கு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வேட்டவலம் அருகே ஸ்ரீசுப்ரமணியர் சுவாமி கோயிலில் அன்னதானம் சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட 32 பேருக்கு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வேட்டவலத்தை அடுத்த காட்டுமலையனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்ரமணியர் சுவாமி கோயிலில் 44-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னதானத்தைச் சாப்பிட்ட சிலருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாம். இதேபோல, பாதிக்கப்பட்ட 32 பேர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைப் பெற்று செவ்வாய்க்கிழமை மாலை வீடு திரும்பினர்.
இதற்கிடையே, கீழ்பென்னாத்தூர் அரசு ஆரம்ப சுகாராத நிலைய மருத்துவ அலுவலர் ரவீந்திரன், மருத்துவர் எழிலரசி மற்றும் மருத்துவக் குழுவினர் காட்டுமலையனூர் கிராமத்தில் முகாமிட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தகவலறிந்த வேட்டவலம் போலீஸார் விரைந்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அன்னதானத்துக்காக சமைக்கப்பட்ட உணவு சரியாக வேகவில்லை என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.