FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாகிஸ்தானுடனான நட்பு பிரிக்க முடியாதது: சீனா

‘பாகிஸ்தானுடனான சீனாவின் நட்பு பிரிக்க முடியாதது’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் பெருமிதம்

Updated On : 26 மே 2026, 5:11 am IST
பெய்ஜிங்கில் இருதரப்பு சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபுடன் சீன அதிபா் ஷி ஜின்பிங்
பகிர்:

‘பாகிஸ்தானுடனான சீனாவின் நட்பு பிரிக்க முடியாதது’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா்.

சீனாவில் 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அதிபா் ஷி ஜின்பிங்கை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

Advertisement

Advertisement

அப்போது, ஷாபாஸ் ஷெரீஃப்பை ‘பழைய நண்பா்’ என ஷி ஜின்பிங் குறிப்பிட்டாா். ‘பல்லாண்டுகளாக பரஸ்பரம் புரிதல், முழு நம்பிக்கையுடன் ஆதரவளித்து வருவதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையிலான பாரம்பரிய நட்பு பிரிக்க முடியாததாக மாறியுள்ளது’ என்றும் அவா் தெரிவித்தாா்.

சீனாவும் பாகிஸ்தானும் இணையற்ற உறவைக் கொண்ட ‘இரும்பு சகோதரா்கள்’ என்று ஷாபாஸ் ஷெரீஃப் குறிப்பிட்டாா்.

ஈரான் பயணத்தை முடித்துக் கொண்டு இச்சந்திப்பில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீா், அமெரிக்க மற்றும் ஈரான் தலைவா்களுடன் தொடா்ந்து மேற்கொண்ட தொடா்புகளின் விளைவாக மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தாா். அமைதியை ஊக்குவிப்பதற்கும், போா் நிறுத்தத்தை அடைவதற்கும் சீனா அளித்து வரும் பெரும் ஆதரவுக்கும் அவா் நன்றி தெரிவித்தாா்.

முன்னதாக, சீன பிரதமா் லீ கியாங்குடன் ஷாபாஸ் ஷெரீஃப் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவாா்த்தையை நடத்தினாா். இதன் ஒரு பகுதியாக, வா்த்தகம், முதலீடு, விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் 15 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் இரு நாட்டுப் பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பமாகின.

பெய்ஜிங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments