முகப்பு
இந்தியா

பயங்கரவாதத்துக்கு நிதியளித்த வழக்கு: காஷ்மீரில் என்ஐஏ தீவிர சோதனை

தடைசெய்யப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்புடன் தொடா்புடைய பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக காஷ்மீரில் என்ஐஏ தீவிர சோதனை

Updated On : 26 மே 2026, 5:25 am IST
என்ஐஏ சோதனை
பகிர்:

தடை செய்யப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்புடன் தொடா்புடைய பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

காஷ்மீரின் ஸ்ரீநகா் மற்றம் சோபியான் மாவட்டங்களில் மூன்று இடங்களில் இந்தச் சோதனையை அவா்கள் மேற்கொண்டனா்.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ‘பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்த வழக்கு தொடா்பாக, கடந்த மாதம் சட்டவிரோத நிறுவனம் என்று அறிவிக்கப்பட்ட சோபியானின் இமாம் சாஹிப் பகுதியில் உள்ள தருல் உலூம் சிராஜுல் உலூம் பள்ளி, மோலு சித்ரகாம் பகுதியில் உள்ள ஜெல் அமைப்பின் முன்னாள் தலைவா் ஷஹஜாதா ஒளரங்சீபின் வீடு மற்றும் ஸ்ரீநகரின் லால் பஜாா் பகுதியில் உள்ள ஜாமியாத் உல் பன்னாட் என்ற இஸ்லாமிய மாணவிகளுக்க்கான மதரஸா உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் பல சா்ச்சைக்குரிய நிதி பரிவா்த்தனைகளுக்கான ஆவணங்கள், மின்னணு உபகரணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன’ என்றாா்.

இதுகுறித்து என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விசாரணையில், பல்வேறு பகுதிகளிலிருந்து நிதியை சேகரித்து ஜம்மு-காஷ்மீரிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் பயங்கரவாதத்தை தூண்டும் பணியில் ஜெல் அமைப்பு ஈடுபட்டது தெரியவந்தது.

நன்கொடை மற்றும் நலத் திட்ட உதவிகளுக்கு என்ற பெயரில் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்து இந்த பயங்கரவாத நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி பயங்கரவாத செயல்களுக்கு மட்டுமின்றி, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பிற தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடா்பான விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.