தேசிய வாக்காளர் தின ஆலோசனைக் கூட்டம்
செய்யாறில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செய்யாறில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான ஆர்.அன்னம்மாள் தலைமை வகித்தார். வட்டாட்சியர் க.மகேந்திரமணி முன்னிலை வகித்தார். வட்ட தேர்தல் துணை வட்டாட்சியர் சுகுமாரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியின்போது, செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செய்யாறு வட்டத்தின் வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் அனைவருக்கும் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய வாக்காளர் தின விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வரப்பெற்ற சுவரொட்டிகள், சட்டையில் அணியும் வில்லைகள் (பேட்ஜ்கள்), சிறிய விளக்கவுரை புத்தகங்கள் ஆகியவை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டன.
இதில், செய்யாறு வட்டத்தைச் சேர்ந்த உள்வட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.