கலசப்பாக்கத்தை அடுத்த கிடாம்பாளையம் ஊராட்சியில் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி மைய கட்டடம் தரமற்று கட்டப்படுவதாக தகவல் பரவியதை அடுத்து கட்டுமானம் இடித்து அகற்றப்பட்டது.
கலசப்பாக்கத்தை அடுத்த கிடாம்பாளையம் ஊராட்சியில் 2017-2018ஆம் ஆண்டுக்கான நிதியில் ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் ஒப்பந்ததாரரால் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது அடி கடகால்போட்டு அடிமட்டம் வரை கட்டுமான செய்து, கம்பி கட்டி தூண் எழுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அப்பகுதி இளைஞர்கள் இந்தக் கட்டடம் தரமற்று கட்டப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை மாலை செல்லிடப்பேசியில் படமெடுத்து சமூக வலைதளத்தில் பரவவிட்டனர்.
இதைத் தொடர்ந்து கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வத்தின் செல்லிடப்பேசிக்கும், அங்கன்வாடி மைய கட்டடம் சரியான அளவில் சிமென்ட், மணல் கலக்காமல் தரமற்று கட்டப்படுவது மற்றும் தூண்களை கை, கால் மூலம் உடைப்பது போன்ற படங்களை அனுப்பினர்.
இதனால், அதிருப்தியடைந்த வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ உடனடியாக கிடாம்பாலையம் கிராமத்துக்கு வந்து ஆய்வு செய்து, ஒன்றிய உதவி செயற்பொறியாளர் அண்ணாதுரை, சாலை ஆய்வாளர் பாஸ்கரன்ஆகியோரை வரவழைத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் திங்கள்கிழமை கட்டுமானத்தை இடித்து அகற்றினார். இதனால் கிடாம்பாளையம் பகுதியில் பரபரப்பு நிலவியது.